ஏரிக்கரை ஓரத்தில இளவட்டமாய் நிற்பவளே
தேருமேல ஏறி வாரேன் திரவியமே உன்ன பார்க்க.. - அடி
கண்டால் நானும் இருப்பேன். - உன்னை
காணாமல் நான் துடிப்பேன்.
அத்தமக ரத்தினமே என் அழகுக்கிளி பெட்டகமே
சித்திரமே உன்னழக செதுக்குகிறேன் எந்தன் நெஞ்சில்
தாகம் தீர்க்கும் குடமே - நீ
தாவணிப் பூ மடமே
வஞ்சியாளே உன் விழியால் வாலிபன் நான் வாடுறண்டி
நெஞ்சமெல்லாம் நெறஞ்சவளே கெஞ்சிடுறேன் ஏத்துக்கடி
வாசமுள்ள பூவே - இனி
நீதான் எந்தன் வாழ்வே.
ஆவாரம் தோட்டத்தில ஆடி வரும் பூமயிலே
தேவாரம் பாடி வந்தேன் தேனே உன்ன பார்க்கும் முன்ன
உலவ நீயும் வாடி - என்
உசுரக் கொஞ்சம் தாடி
No comments:
Post a Comment