Friday, 16 November 2012

கள்ள மௌனத்தைக் கண்டு வெட்கித் தலைகுனிகிறேன்.

காலகாலமாய் என்மீதும்,
என் சமூகத்தின் மீதும் அவர்கள் நிகழ்த்தும்
அத்தனை வன்முறைகளிலும்
மெத்த படித்த என் சாதி இந்து நண்பர்கள்
கடைபிடிக்கும்
கள்ள மௌனத்தைக் கண்டு
வெட்கித் தலைகுனிகிறேன்.

Sunday, 7 October 2012

கூத்தாடி பொழப்பு எல்லாம் காத்தாடி படும் பாடு.



 சமீபத்தில் வெளியான 'வெங்காயம்' தமிழ்த் திரைப்படம் பார்த்தேன். படத்தின் தொடக்கத்தில்  ' இக்கதைகள் அனைத்தும் உண்மையே: கற்பனை இல்லை' என்று தான் தொடங்குகிறது. இந்தப் படத்தில் இந்து மத சாமியார்களின் வாக்கிற்க்கும், சூழ்ச்சிக்கும், வக்கிர புத்திக்கும்  பலியான சில குடும்பங்களின் கதைகள் சொல்லப்படுகிறது. இதில் சேலம் பகுதியைச் சார்ந்த கணேஷ் என்ற தெருக்கூத்தாடியின் வாழ்க்கை  என்னுடைய மனதில் ஆறாத வடுவை ஏற்படுத்தியது. அதனைப் பற்றியதான பதிவுதான் இந்த கட்டுரை.  கணேஷ்  பேர்போன கூத்தாடி. கூத்துதான் அவரின் குடும்பத்தை  கொண்டு செல்கிறது. கணேஷ் மனைவியை இழந்தவர். அவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உண்டு. 





மகன் காய்ச்சலால் அவதிப்பட கணேஷ் அவனை பாண்டிச்சேரி அழைத்துச் செல்ல வேண்டி இருக்கிறது. ஆனால் அதற்க்கு தேவையான பண வசதி அற்றவனாக கணேஷ் இருக்கிறான். ஓலை போட்ட குடிசை வீடு. இந்த நிலையில் கணேஷ் தெரிந்தவர், சுற்றம் பக்கத்தினர் என எல்லோரையும் கேட்டு வெறுத்த போன நிலையில் தன்னோடு கூத்தாடும் குழுவினருடன் கடைசியில் முறையிடுகிறான். அவர்கள் கணேசை திட்டி அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து பணம் திரட்டி கொடுக்கிறார்கள். இந்த நிகழ்வு முதலில் என்னை பாத்தித்தது. அதாவது ஒரு கலைஞனின் வலியை, அவனுடைய சூழலை ஒரு சக கலைஞன் தான் அறிய முடிகிறது. அதிலும் கூத்தாடி என்றால் எல்லோருக்கும் இளக்காரம் தான். ' கூத்தாடி பயனுக்கு திமிர பாரு' இப்படி தான் ஊரில் சிறுவர் முதல் பெரியவர் வரை கூற கேட்டிருப்போம். இந்த நிலைதான் அனைத்து கூத்தாடிகளுக்கும். 

கூத்தாடி என்ற சொல் இங்கு  இழிவு என்பதோடு தொடர்பு படுத்தப்பட்டிருப்பதை   இருப்பதை உணர முடிகிறது. சங்க காலத்தில் கூத்தர் என்று மரியாதையோடு விளித்துள்ளதை அறிகிறோம். பின்னாளில் அவர்களின் சமூகம், பொருளாதாரம் போன்ற சூழல்களின் அடிப்படையில் இந்த சமூகத்தில் மதிப்பு குறைய ஆரம்பித்தது. இதனை நாம் கூத்தியாள் என்றாள் சொல்லில் இருக்கும் இழிவுடன் தொடர்பு படுத்தி பார்க்கலாம். மண்ணின் கலைகளை மக்களுக்கு எடுத்துக் காட்டும் கலைஞனின் நிலையை வெங்காயம் படத்தில் காண முடிகிறது. 

கதையில் கணேஷ் அவர்கள் சக கூத்தாடிகள் திரட்டி கொடுத்த பணத்தை பெற்றுக் கொண்டு பாண்டிச்சேரி வந்து சேர்ந்து ஒரு நாள் இரவு தங்கி மறுநாள் மருத்தவரை சந்திப்பதற்க்கு முன், கனேஷின் மகனை நரபலிக்காக சமூக விரோதிகள் சிலர் கடத்தி சென்று அவனை பலி கொடுத்தப் பின் பார்க்க நேர்ந்த தந்தையின் வாழ்க்கை மிகக் கொடூரமானது. அந்த காட்சிகள் அனைத்தும் மிக ஆழமான வலியை தரக் கூடியதாகவே இருக்கிறது.பின் மகனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அறுவை சிகிச்சை செய்ய, பணம் வேண்டும் என்று மருத்தவர்கள் கூற, அதனைக் கேட்ட  மகன் தன் தந்தையிடம் "உன்னிடத்தில் தான் பணம் இல்லையே என்று கேட்பதும்,. என்னை சாக விட்டுடாதப்பா" என்ற மகனின் கடைசி வார்த்தையும், பணம் திரட்ட வேண்டி ரோட்டில் கூத்தாடிக் காட்டும் கணேஷின் நிலையும் உச்ச கட்ட வேதனையை அளிக்கிறது. 

இதுதான் கூத்தாடிகளின் நிலையா? கலைஞர்களின் நிலையா? இந்த தேசம் இப்படித்தான் பலரை ஆடவிட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இப்படி வேடிக்கை பார்ப்பது நமக்கும் வாடிக்கை யாகி விட்டது. வெங்காயம் படத்தில் வரும்  கணேஷின் வாழ்க்கை என் மாமாவின் வாழ்க்கையோடும் தொடர்புடையதாக இருக்கிறது. இதுதான் என்னை மேலும் வருத்திக் கொண்டிருக்க காரணமாக கூட இருக்கலாம். திண்டிவனம் பக்கத்தில் தென் நெற்குணம் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர் தேவராஜ். மூன்றாம் வகுப்பு வரை தான் பள்ளிப் படிப்பு. பிறகு மாடு மேய்த்தல். பின் தாய்மாமன் அர்ச்சுனன் (என்னுடைய தந்தை) கூத்து வாத்தியார். இதில் ஈடுபாடு கொண்ட தேவராஜ் கூத்து கற்று பின்னாளில் ஊர் போற்ற மிகப் பெரிய கூத்தாடியாக உருவானார். அவர்க்கு இரண்டு மகள்கள் இரண்டு மகள்கள். ஒருமுறை இளைய மகனின் காது அறுவை சிகிச்சைக்காக பாண்டிச்சேரி மருத்துவமனையில் சேர்த்துவிட்டு தினமும் இரவில் கூத்தாடிவிட்டு பகலில் கண்கள் சிவந்திருக்க வந்து பகல் முழுவதும் அவனுடன் இருந்து பார்த்துக் கொள்வார். 

அந்த நாட்களில் நான் சில நாட்கள் அவனுடன் தங்கியிருந்தேன். அந்த நாட்களில் தினமும் பாரதக் கதைகள், நீதிக் கதைகள் என சொல்லுவார். அந்த வார்டில் இருந்த அத்தனை பெரும் ஆவலுடன் கேட்க ஓடி வருவர். பிறகு நல்ல முறையில் என்னுடைய மாமாவின் மகன் அறுவை சிகிச்சை முடிந்த வீடு திரும்பிய   ஓராண்டில் கூத்து முடிந்து வீடு திரும்பிய வேளையில் விபத்து ஏற்பட்டு ஒருவாரம் புதுவை ஜிப்மரிலும்., சென்னை அரசு மருத்துவமனையிலும் சேர்த்து சிகிச்சை பலனின்றி இறந்து போனார். அவரின் இழப்பு அவர் சார்ந்த அந்த கூத்துக் கும்பலுக்கும் மட்டுமல்லாது. ஒட்டுமொத்த கூத்துக் கலைக்கே ஏற்பட்ட இழப்பாக மாறியது. கூத்தின் மதிப்பு இவரைப் போன்ற சிலரால் தான் உயிர்ப்பு பெற்றிருந்தது உண்மை. 

இங்கு இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான ' அரிதாரத்த பூசிக் கொள்ள ஆசை ' என்ற பாடலில் வரும் ஒரு வரி எனக்கு வெங்காயம் படத்தில் வரும் கணேஷையும் , என் மாமா தேவராஜையும்   நினைவு படுத்துகிறது.அது தான் இந்த வரி "கூத்தாடி பொழப்பு எல்லாம் அந்த காத்தாடி படும் பாடு". 

இங்கு எனக்கு இன்னொரு கேள்வி எழுகிறது. கூத்தாடி பொழப்பு காத்தாடி படும் பாடு. சரி, கூத்தாடியை பாதியிலே இழந்த அவரின் குடும்பம் படும் பாடு ?






Saturday, 25 August 2012

அருங்கூத்து - புத்தக மதிப்புரை


நாட்டார் நிகழ்த்துக்கலை என்பது மண்ணோடும் மன சார்ந்த மக்கள் மரபோடும் நெருங்கிய தொடர்புடையது. எந்த ஒரு நிகழ்த்துக்களையும் மக்களுக்கானதாக இருக்கும்போது அதன் செல்வாக்கு, நிகழ்த்துமுறை , வளமை சார்ந்த சடங்குகளின் அடிப்படை பண்பாட்டுக்கூறுகள், சமகால சூழல் என்றும் பேசப்படுபவையாக இருக்கின்றன. இவ்வாறு பேசப்படும் சூழலுக்கு நிகழ்கலையும்,நிகழ்த்துக் கலைஞரும் முதன்மைப் பாத்திரங்களாகின்றன.
 தமிழகத்தின் மிகப் பழமையான, தொன்றுதொட்டு நிகழ்த்தப்பட்டு வருகின்ற ஒரு கலை தெருக்கூத்து ஆகும்.தமிழகத்தில் மிகப் பரவலாக கரகம், ஒயில், கும்மி, குச்சிப்புடி, கணியான் கூத்து, வள்ளி திருமணம், சங்கரதாஸ்சுவாமிகள் நாடகம் போன்ற நாட்டார் நிகழ்கலைகள் மக்களால் நிகழ்த்தப்பட்டாலும், தெருகூத்திற்கு தனித்த ஓர் அடையாளமும், மதிப்பீடும் இருப்பதை இன்றும் நாம் அறிய முடியும். தமிழ்ச் சூழலில் மூன்று வகையான தெருக்கூத்து மரபுகள் பின்பற்றப்பட்டு வருவதைக் காணமுடிகிறது. 1 . தெற்கத்திய பாணி (திண்டிவனம், கடலூர், விழுப்புரம்) 2 . வடகத்திய பாணி (காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர்) 3 . மேற்க்கத்திய பாணி ( தருமபுரி, சேலம், ஈரோடு). இந்த மூன்று பிரதேசங்களிலும் பாரதம் மட்டுமே முதன்மையாக உள்ளது. குறிப்பாக திரௌபதியம்மனை மையமிட்டு பாரதக்கதைகளின் வழி (நல்லாப்பிள்ளை பாரதம், வில்லிபுத்தூரார் பாரதம்) நிகழ்த்தப்பட்டு வருகிறது. இது தவிர்த்து ஊர் மாரியம்மன் கோயில் திருவிழா, கெங்கையம்மன் கூழ் வார்த்தல், ஆடிமாத திருவிழா மற்றும் இறப்பு, காரிய சடங்கு நாட்களில் நிகழ்த்தப்பட்டு வரும் மரபு உள்ளது.
 தவசி கருப்புசாமி தொகுத்துள்ள அருங்கூத்து, ' கொங்கு மண்டல நிகழ்த்துக் கலைஞர்களின் வாழ்வியல் பதிவு 'என்பது மேற்கத்திய பாணி மரபின் முக்கியத்துவம், கலை, விழுமியம், பண்பாடு குறித்த பல்வேறு சிந்தனைகளுக்கு பதிலளிக்கும் விதமாகவும், அதன் இருப்பை வெளிப்படுத்துபவையாகவும் உள்ளது. அருங்கூத்துபொதுவாக சேலம், ஈரோடு, நாமக்கல் பகுதிகளை மையமிட்டு சேகரித்த தெருகூத்து தகவல் களஞ்சியம் என்று சொல்லலாம்.இந்நூலில் லட்சுமி அம்மாள், எலிமேடு மகாலிங்கம், எலிமேடு வடிவேல் போன்ற ஏழு கலைஞர்களிடம் வினா-நிரல் அடிப்படையிலும், கொத்தாபாளையம் குருநாத வாத்தியார், கூத்திசை மேதை செல்லப்பன் போன்ற நான்கு கலைஞர்களின் வாழ்நாள் கலைப்பணியை தன் வரலாற்று வடிவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.இடையிடையே அமரர் பெரிய குழந்தை, அமரர் வேங்கிப்பாளையம் முத்து, மனோன்மணி போன்ற இருபத்தி ஏழு கூத்துக் கலைஞர்களின் வாழ்க்கைக் குறிப்புகளும் தரப்பட்டுள்ளது.
 ஒரு நிகழ்கலையின் வரலாற்றைக் கட்டமைக்கவும், அதில் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற பிழையைக் களைவதற்கும் கலைஞர்களின் நேர்காணல் அவசியம் என்கிறார் கோ. பழனி (ப.166 . மறைய மறுக்கும் வரலாறு , தொகுப்பு ப. பத்மினி ). இங்கு நாம் கொங்கு மண்டல தெருக்கூத்து கலைஞர்களின் நேர்காணல்களின் வழி, கொங்கு மண்டல வட்டார, இன, மத, மொழி ரீதியிலான கலை வரலாற்றை கட்டமைக்க முடியும். அந்த வகையில் லட்சுமி அம்மாள், ஜெயா செல்லப்பன் போன்ற கலைஞர்களின் நேர்காணல்களின் வழி கொங்கு மண்டல தெருக்கூத்து மரபில் பெண்கள் கூத்து ஜமா வைத்து நடத்தியிருப்பதும், கூத்து வாத்தியாராக இருந்திருப்பதும் நமக்கு மற்ற (வட/தென் ) பகுதி கூத்து மரபிலிருந்து வேறுபட்டிருப்பதை அறிய முடிகிறது.
 கலை உணர்வு என்பது, தான் சார்ந்த சமூகம் சார்ந்தும், மண் சார்ந்தும் எழக் கூடிய உணர்வு ஆகும். கலைகள் பெரும்பாலும் இன்றும் அடித்தட்டு மக்களிடம் வாழ்ந்து வருவதை நாம் அறிவோம். கலைமாமணி, கலா வித்தகர், பத்ம ஸ்ரீ போன்ற விருதுகள், கலைகள் சார்ந்தும் (பரதம், திரை..) கலைஞர்கள் சார்ந்தும் (சாதி, தொழில்..) தான் இங்கே கொடுக்கப்பட்டு வருகிறது. தவசி கருப்புசாமி அவர்களின் தொகுப்பு முயற்சி என்பது தெருக்கூத்து வரலாற்றை கட்டமைக்க உதவும் என்பதில் எந்த ஐயமுமில்லை. அதே வேளையில் கலைஞர்களின் வயது, அனுபவம், சாதி, தொழில் போன்ற குறிப்புகளையும், பின்னைப்பில் கொடுத்துள்ள கூத்து ஜமாக்களின் பட்டியலோடு, முகவரியும், தொடர்பு என்னும் கொடுத்திருந்தால், இளம் தலைமுறையினருக்கும், ஆய்வு மாணவர்களுக்கும் பெரும் உதவியாக இருந்திருக்கும். கொங்குச் சீமையின் நிகழ்த்து வெளியின் பிதா மகன் அமரர் சடையன் வாத்தியார் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவரைப் பற்றிய குறிப்பு நமக்கு நூலில் கிடைக்காதது சற்று வருத்தமே.
 'என்னாடா இவனெல்லாம் வேஷம் போட்டு கூத்தாடும்போது நம்பளால முடியாதா?' என்ற கொம்பாப்பட்டி ராஜி போன்ற கலைஞர்களின் கலை உணர்வும்,மண் உணர்வும் தான் இன்றும் தெருக்கூத்தின் உயிப்புத் தன்மையை கலை உலகிற்கு மெய்ப்பித்துக் காட்டிக் கொண்டிருக்கிறது. இந்நூலில் அக்கப்போரு பகுதியை படிக்கிறபோது நிச்சயம் நாம் மண்ணின் கலை இதழாக வெளிவரும் "மணல்வீடு" இதழை படிக்கின்ற அனுபவத்தை நமக்கு ஏற்படுத்துகிறது. அந்த வகையில் மணல் வீடு கலை இதழும், மணல் வீடு பதிப்பாக வெளிவரும் அருங்கூத்தும்(டிசம்.2010 ) தமிழ் தெருக்கூத்து வரலாற்றில் தன் தடத்தை பதித்துள்ளது என்று துணிந்து சொல்லலாம்.

Wednesday, 22 August 2012

எழுச்சித் தமிழர் பொன்விழா புது தில்லியில் 21.8.2012 அன்று சிறப்பாக கொண்டாடப் பட்டது. தில்லி சாக்கியா சொசைட்டி மற்றும் தில்லி தமிழ் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்தனர். ஏராளமான தமிழ் மக்கள், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள்  வந்து கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். 










22.8.2012 புதன் அன்று புது தில்லியில் எழுச்சித் தமிழர் அண்ணன் 
தொல். திருமாவளவளவன் வீட்டில் எடுத்துக் கொண்ட படம்



Monday, 13 August 2012

எனது மேசையின் மீது புத்தகம்

மேசை மீது வைக்கப்பட்ட புத்தகம்
இன்னும் திறக்கப்படாமலே இருக்கிறது.
எத்தனையோ நாட்கள் ஆகிவிட்டன
புதிய புத்தகங்கள் வர போக இருக்கின்றன
அதற்குத் துணையாக இதழ்களும் .


அடுக்கி வைக்கப்படும் சூழலில் மட்டும்
மனம் அடுக்கிக் கொள்கிறது
படிக்க வேண்டியதை,
எழுத வேண்டியதை
கட்டாயத்தின் பேரில் திருப்பப்படும்
புத்தகங்களின் குறிப்புகள் மட்டும் எழுதப்படுகிறது
வேறொன்றும் செய்ய முடியவில்லை

புத்தகங்கள் என்னைப் பார்த்து 
ஏளனமாய் சிரிப்பதை உணர்கிறேன்.
வாய் மட்டும் சொல்லிக் கொண்டிருக்கிறது
இதைப் படிக்க வேண்டும், அதைப் படிக்க வேண்டும் என்று.
கைப் பேசியும் மடிக்கணினியும் 
கட்டிப்போட்டு வைத்திருக்கிறது என்னை.

தீவிர வாசிப்பு
தீவிரமாய் குறைந்து போனது என்னில்.
விமர்சனங்களைப் படித்து 
விமர்சனம் பேசுபவனாய் இருக்கிறேன்.
நவீனம் சுறுசுறுப்பா? சோம்பலா?
விவாதங்கள் தேவையில்லை.
இருந்தும் 
செயல்படுவேன் என்ற நம்பிக்கையில் இன்றும்

Thursday, 9 August 2012

என்னை அறிதல்

உன்னை அடையாளம் 
காட்டமுடியவில்லை என்னால் 
உன் வெற்றிடத்தையும் 
நிரப்ப முடியவில்லை என்னால் 

நீ இருக்கிறாய் என்பதை மட்டும் 
உணர முடிகிறது 
தேடி அலைகிறேன் 
இந்த பிரபஞ்சம் முழுவதும் 
நினைவின் நீட்சி எல்லை தாண்டி செல்கிறது 
நீ இருந்தததற்கான 
அத்தனை தடயங்களையும் 
தூசு தட்டி பார்க்கிறேன். 

என் தனிமையை 
உன்னைக் கொண்டு நிரப்பிக் கொள்கிறேன் 
வனாந்தர உலகை காண்கிறேன். 
மூளை முழுக்க போதை 
காட்டாற்று வெள்ளம் போல் எண்ணங்களின் சீற்றம் 
ஓட்டம் கொள்ளத் துடிக்கிறேன் ஊர் ஊராய்
நீ என்னிலிருந்து வெளியேறும் வரை.

Wednesday, 8 August 2012

நகரத்து வாசல்


கண்முன்னே மாலை இருட்டிக் கொண்டிருக்கிறது
அசையாமல் விழித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

வெள்ளை, மஞ்சள், சிகப்பு என

விளக்குகள் தெரிய ஆரம்பித்தன
சாலையில் வாகனங்களின் இரைச்சல்
காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது
வீட்டிற்கு செல்வதில்
அனைவரும் மும்புரமாகி இருந்தனர்.

குருவிகள் அவைகளுக்குள் கொஞ்சியபடியே

பறந்து கொண்டிருக்கின்றன
வாயிற்படியில் அமர்ந்திருக்கிறேன்
என்னை நோக்கி கையசைக்கும்
ரெட்டைஜடை பின்னலிட்ட பெண்ணொருத்தி
தேநீர் கொண்டுவந்து குடிக்கச்சொல்லி
வற்புறுத்தும் என் மனைவி
விளையாடச் சென்ற பிள்ளைகளின்
வரவை எதிர்பார்த்தபடி நான்

உறக்கம் கண்களை தழுவத் தொடங்கிற்று.

செயலற்றவனாய் ரசித்துக் கொண்டிருக்கிறேன்
வாழ்வின் அத்தனை ரகசியங்களையும்.

Saturday, 21 July 2012

புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், தமிழ் பண்பாட்டுப் பேரவை கொண்டாடிய 'தமிழ் மாலை' நிகழ்ச்சி புகைபடங்கள் - 2012















புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், தமிழ் பண்பாட்டுப் பேரவை கொண்டாடிய பொங்கல் நிகழ்ச்சி புகைபடங்கள் - 2012










Monday, 9 July 2012

உன் பெயரை மட்டும் சொல்லும்.


மல்லிகைச்சரமே
என் மனதை 
தினம் கொள்ளும் 
மாணிக்க ரதமே 

நீ வீசும் வாசம் 
அந்த கணம் 
ஒரு நொடி நிற்கும் 
என் சுவாசம்.

உலகில் 
எங்கோ பறக்கிறேன் 
பிரபஞ்சத்தில் மிதக்கிறேன்.

மென்மை, பெண்மை 
என்ற வருணனை 
இல்லை இல்லையென்ற போதும் 
மனம் விடாமல் துரத்திக் 
கொல்லும் தினமெனை.

அழகினை அடைய 
அடைந்து கிடக்க 
வழியினை தேடுது 
என் உயிர் 
விழியின்றி வாடுது.


வசந்தத்தின் ஊஞ்சல் 
என் நினைவோடு செல்லும் 
ஒரு நொடி நின்று 
உன் பெயரை மட்டும் சொல்லும்.

அன்புடன் 
சோலைத் தென்றல் -- 


Saturday, 16 June 2012

புளிய மரப் பேருந்து

புளிய மரப் பேருந்து 
வாரா வாராம் சுற்றுலாதான்
கண்ணம்மா ஆயா புளிய மரத்தில்


மூன்றாவது படிக்கும் போதே
டிரைவர் கண்டக்டர் ஆகிவிட்டோம்
போன ஊரே திரும்பவும்
சலித்ததில்லை ஒரு நாளும்


மேல்மா புளிய மரம் நிறுத்தம்
மேல்மா அம்பேத்கர் போர்டு நிறுத்தம்
பேருந்து குலுங்கியபடி செல்லும்
கண்ணம்மா ஆயா புளிய மரத்தில்


மேல்மா முதலியார் வீடு நிறுத்தம்
மேல்மா ஆச்சாரி வீடு நிறுத்தம்
மேல்மா கன்னியப்பன் கவுண்டன் டீ கடை நிறுத்தம்
வேகமாக குலுங்கும் கிளை
மேல்மா கூட்ரோடு வந்ததும் இறங்கி விடுவோம்


திரும்பவும் ஏறுவதற்குள்
கண்ணம்மா ஆயா
'உங்கள அள்ள துள்ள வாரிக்கினு போவ 
வாந்தி பேதி வந்து தூக்கினு போவனு' கழுவி ஊத்த 
நாலா மூலையா ஓடுவோம்,


புளிய மரம் இருந்த இடத்தில் இன்று
கண்ணம்மா ஆயா வீட்டு பாத்ரூம்
பார்த்து வெறிக்க முடிகிறது....

     - கவிஞர். கலை அமரேசன்.



Thursday, 14 June 2012

எழுச்சி


எம் தலைவா
எழுச்சித் தமிழ் மகனே
எழுந்து வரும் சூரியனே
எங்க நெஞ்சி வானத்துல
மொளைச்ச நட்சத்திரமே...

அங்கனுர் மண்ணுல
உதித்த என் ராசா
எங்கள காக்க வந்த
என் சேரி மகராசா
என் முறுக்கு மீசை காராமுன்னேறும் எந்தலைவா
உன் பேச்சு இடி முழக்கம்
பேரலையை வென்றுவிடும்

பார்ப்பனிய மண்ணிலே
பாராளுமன்றத்திலே
டெல்லி கோட்டையிலே
உன் உரைவீச்சு கேட்டுப்புட்டு
கன்னியாக்குமரிக் கடல்
கைத்தட்டி வாழ்த்துதடா....
          
-கவிஞர். கலை அமரேசன்.

வீறுகொண்ட அரிமா



முறுக்கு மீசையுடன்
முறைக்கும் பார்வையுடைய
புலியும் சிறுத்தையும்
உன்னை பார்த்து
பெருமை அடையுமா
பொறாமை கொள்ளுமா
தெரியவில்லை எனக்கு!

புகைபடத்தில் மாத்திரம்
கண்டு இருக்கிறேன்
புரட்சியாளர் அம்பேத்கரை
இப்பூமிக்கு புரியவைத்தாய்
இப்படிதான் இருந்திருபாரென்று
உன்னை கண்டு.


பாதிஉசிரு  போயிருச்சு
சாதிக் கொடுமையில
மீதிஉசிரு  உள்ளவரை
நீதி  கிடைக்கும்வரை
போராடும் சிறுத்தை

உன்னை எண்ணி
மார்தட்டிக் கொள்வதைவிட
உன்னைப்  போல
மீசைதொட்டு முறுக்கிவிடுவதிலேயே
பெருமை கொள்ளும்
எந்தன் கரம்.

பொடைக்குது நரம்பு
உம்பேரைச் சொல்லையிலே
சுண்டுது ரத்தம்
உம்பேச்சைக் கேட்கயிலே
பொங்குது வீரம்
உம்பின்னால் நடக்கையிலே

வீறுகொண்ட அரிமா
நம்ம அண்ணன்
திருமணமுடிக்கா திருமா!
                                      
-N.S.VINODJAGADISH.

தலித் ஆதார மையம்

மதுரை , அரசரடி தலித் ஆதார மையத்தில் 31.5.2012 அன்றுஎடுக்கப்பட்ட
புகைப்படங்கள்




புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 121 வது பிறந்த நாள் ஏப்ரல் 14 2012

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக தலித் மாணவர் கூட்டமைப்பின் சார்பில் கொண்டாடப்பட்ட புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாள்விழாபுகைபடங்கள்