Tuesday, 15 October 2024

 

  • புன்னகை பூத்த முகமே! எங்கே சென்றாய்....
    (முதலாமாண்டு நினைவுக் குறிப்பு அக்டோபர் 7, 2023)
     

    இப்படி ஒரு நினைவுக் குறிப்பை எழுதுவது எனக்கு மிகவும் கடினமாக உள்ளது. மிஷபின் நினைவுகள் மிகவும் ஆழமானது. அன்பு நிறைந்தது. மலர்ந்த மலரைப் போன்றது. மிஷபுடன் பழகிய யாராக இருந்தாலும் அவரின் குழந்தைச் சிரிப்பை மறக்க முடியாது. முதல் சந்திப்பிலேயே அனைவரின் உள்ளத்திலும் பதியும் படி அவரின் வரவேற்பு இருக்கும்.
     
    2011 ஆம் ஆண்டு புதுடில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நான் சபர்மதி விடுதியில் தங்கியிருந்தேன். அப்போது மலப்புரம் பகுதியைச் சேர்ந்த அஸ்லாம் அவர்களுக்கு விடுதி கிடைக்க ஆறுமாதம் ஆகும் என்பதால் அது வரை அவர் என்னுடன் தங்கியிருந்தார். டிசம்பர் மாதம் என்று நினைக்கிறேன். அப்போது என் அறையில் தங்கியிருந்த அஸ்லாம் அவர்களைப் பார்ப்பதற்காக மிஷப் மற்றும் முஹஸின் Muhammed Muhassin என் அறைக்கு வந்தனர். அதுதான் எனக்கும் மிஷப்பிற்கும் முதல் அறிமுகம். நான் தமிழ்நாட்தைச் சார்ந்தவன் என்பதால் அவருக்கு மகிழ்ச்சி. அவர் என்னுடன் அண்ணா என்று உரையாடினார். அதே விடுதியில் என்னுடைய நண்பர் ரஹீம் அவர்களும் தங்கியிருந்தார்.
     
    நான் , ரஹீம் மற்றும் அஸ்லாம் ஆகிய மூவர் சபர்மதி விடுதியில் இருப்பதால் மிஷப் அடிக்கடி எங்கள் விடுதிக்கு வந்து எங்களுடன் சேர்ந்து உரையாடுவது, பாட்டு பாடுவது என எங்கள் நட்பு தொடர்ந்தது. பிறகு அவருக்கும் சபர்மதி விடுதியே கிடைத்தது. சில மாதங்கள் மட்டும் அங்கு இருந்தார்.
     
    பல்கலைக்கழகத்தில் எல்லா மாநிலத்து மாணவர்களும் படித்தாலும் எனக்கு மலையாள மாப்பிள்ளா நண்பர்கள் மீது நட்பு நெருக்கமானது. காரணம் அவர்களின் அன்பும் அரவணைப்பும் அரசியலும் என்னை மிகவும் கவர்ந்தது. நான் நாட்டுப்புற பாடல்கள் பாடுவது வழக்கம். அதில் ஈடுபாடு கொண்ட மிஷப் அடிக்கடி மாலை வேளைகளில் பாடச்சொல்லி கேட்பார். கைகளைத் தட்டிக் கொண்டே கூடவே பாடிக்கொண்டு வருவார். மிகவும் ரசிப்பார்.
     
    தமிழ் மாணவர்கள் தமிழ்ப் பண்பாட்டுப் பேரவை என்ற அமைப்பை நிறுவி ஆண்டுதோறும் தமிழ் மாலை என்ற பெயரில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம், நிகழ்ச்சி முடிந்தப் பின் இரவு உணவு மற்றும் பாட்டு, ஆட்டம் என இருக்கும். 2013 என்று நினைக்கிறேன். அந்த ஆண்டு விழா முடிந்ததும் நாங்கள் தமிழ் மற்றும் மலையாளம் பாடல்களைப் பாடிக்கொண்டு ஆடினோம். அந்த வீடியோவைப் பார்க்கும் போதெல்லாம் மிஷப் அவர்களின் புன்சிரிப்பு பூத்த அதில் பளிச்சென தெரியும்.
    2016 ஆம் ஆண்டு அவர் மகாநதி விடுதியில் இருந்தபோது பிரம்மபுத்திரா விடுதிக்கு நான் செல்லும் போது அவரை அடிக்கடி பார்ப்பேன். அவரின் துணைவியாரை எங்களுக்கு அறிமுகப் படுத்தினார். பிரம்மபுத்திரா பேருந்து நிறுத்தத்தில் தான் அவரை இறுதியாகப் பார்த்தது என்று நினைக்கிறேன்.
     
    இந்திய சமூகக் கட்டமைப்பில் மத ரீதியாக முஸ்லீம்களும் சாதி ரீதியாக தலித்துகளும் ஒடுக்கப்படுகின்றனர். இந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தலித்துகளும் முஸ்லீம்களும் ஒன்று சேர்ந்து போராடுவது கட்டாயம். அந்த வகையில் மிஷப் அரசியல் தெளிவுள்ள நபராக இருந்தார். பல்கலைக் கழகத்தில் நடந்த பல போராட்டங்களில் பங்கு கொண்டார். தலித் மானவர்களோடு நல்ல நட்பை மேற்கொண்டார். நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் என்பதால் மட்டுமல்ல தலித் என்பதாலும் என் மீது மிகுந்த அன்பைப் பொழிந்தார்.
     
    நிறைந்த அரசியல் தெளிவும் கருத்தியல் வலிமையும் இருந்தால் தான் ஒருவரால் எல்லோரிடமும் எல்லா சூழலிலும் சமநிலை மனதோடு உரையாட முடியும். அதற்கு சிறந்த சான்றாக மிஷப் வாழ்ந்தார்.
     
    ஜெயபால் அண்ணா.. எப்படி இருக்கு? என்று பார்க்கும் போதெல்லாம் விசாரிப்பார். அந்தக் குரல் இன்னும் அவரை நினைக்கும் போது என் காதில் ஒலிக்கிறது. அவரால் மகிழ்வுற்றோர் யாவரும் அவரையும் அவரின் புன்னகை பூத்த முகத்தையும் என்றும் மறக்கவே முடியாது. எங்கள் இறுதி மூச்சு உள்ளவரை அவரின் நினைவுகள் எங்களுடன் இருக்கும். அத்தகைய தாக்கத்தை எங்கள் உள்ளத்தில் ஏற்படுத்தி விட்டுச் சென்ற மிஷப் புகழ் நீடித்து நிலைக்கும். Jai Mishab


 

Mishab!
Smiling face! where did you go?...... https://www.facebook.com/mishab.irikkur
(First Year Memoir October 7, 2023)
 

I never imagined that I would be writing such a memoir. It causes me a lot of pain and tears. Mishab means for me full of love Like a blooming flower. Mishab’s memories run deep. Anyone who met Mishab will never forget his face with smile. His welcome will be imprinted in everyone's heart at the very first meeting.
 
In 2011, I stayed at Sabarmati Hostel in Jawaharlal Nehru University, New Delhi. At that time Aslam from Malappuram took six months to get accommodation so he stayed with me till then. I think it's December, Mishab and Muhassin came to my room to see Aslam who was staying in my room. That was the first introduction of Mishap and me. He is very happy because I belong to Tamil Nadu. He conversed with me as Anna.
 
My friend Rahim was also staying in the same hostel. As I, Rahim and Aslam were staying at Sabarmati hostel, our friendship continued as Mishab would often come to our hostel and chat and sing with us. Later he also got Sabarmati Hostel. He was there only for a few months.
Although all state students’ study in the Jawaharlal Nehru University, I am close friends with Malayalam Mappila friends. Because of their love, warmth and politics attracted me a lot. I used to sing folk songs. Mishab, who is involved in it, often listens to chants in the evenings. He claps his hands and sings along. Will enjoy it very much.
 
Tamil students established an organization called Tamil Cultural Association and used to organize a cultural program called Tamil Maalai every year, followed by dinner and singing and dancing. I think in 2013, After the program we sang and danced to Tamil and Malayalam songs. I have one Video clip on that event. In that video Mishab's smile shines brightly. Watching that video now is heartbreaking. Tears appear.
 
In 2016 when he was staying at the Mahanadi Hostel, I used to see him often when I went to the Brahmaputra Hostel. He introduced us to his wife. I think that was the last time I saw him at the Brahmaputra bus stop.
 
In the Indian social structure Muslims are oppressed by religion and Dalits by caste. Dalits and Muslims must fight together against these oppressions. In that sense Mishab was a politically articulate person. He participated in many protests in the university. He made good friends with Dalit people. He showered a lot of love on me not only because I was from Tamil Nadu but also because I was a Dalit. He felt our pains.
 
Only with full political clarity and ideological strength can one converse with everyone in all situations with a balanced mind. Mishab lived as the best proof of that.
 
Whenever he sees me, he inquires with love “Jayapal anna. how are you?” That voice still rings in my ears when I think of him. All who were benefited and loved by him will never forget him and his smiling face. His memories will be with us till our last breath. Mishab's fame that left such an impression on us will last forever.
 
Jai Mishab.
 
With pain
Jayabal Solai
Chennai.

Tuesday, 17 September 2024

 

ஆம்ஸ்ட்ராங் எனும் அம்பேத்கரிஸ்ட்

(அ)

பாபாசாகேப் + பகுஜன் நாயக் = சமத்துவத் தலைவர்

-       அ. ஜெயபால்


                                                       

 

            என் வாழ்க்கையிலிருந்து நீங்கள் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் அது நான் ஒருபோதும் என் சமூகத்தைக் கைவிடவில்லை. நான் என் வாழ்நாள் முழுவதும் அவர்களின் மகிழ்ச்சியையும் துயரத்தையும் பெருமையுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மேலும் அதை என் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து செய்வேன்.”   -  பாபாசாகேப் டாக்டர் பி. ஆர். அம்பேத்கர்.

 

            இந்தியச் சமூகம் மனிதனின் பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பித்துக் கல்வி, பொருளாதார, அரசியலில் ஒரு பிரிவினருக்குச் சுதந்திரமும் ஒரு பிரிவினருக்கு அடிமைத் தனத்தையும் கற்பித்து வந்தது. மனித குலத்துக்கு எதிரான இப்போக்கை,  ததாகதர் புத்தர் தொடங்கி மகாத்மா ஜோதிராவ் பூலே, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் முதலான ஆளுமைகள் கேள்விகேட்டுச் சமத்துவச் சமுதாயத்தைக் கட்டமைக்க அரும்பாடுபட்டனர். இந்திய வரலாற்றில் புத்தரின் போதனைகள் அறியாமை இருளில் கிடந்த மக்களுக்கு  அறிவு வெளிச்சதைக் காட்டியது. நவீன இந்தியாவைக் கட்டமைத்த பாபாசாகேப் டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் அவர் தம் அறிவு நுட்பத்தின் ஆற்றலால் பல கோடி இந்திய மக்களின் மேம்பாட்டிற்கு அரசியலமைப்புச் சட்டத்தின் வழி பாடாற்றினார்.


           

            இந்தியா முழுமைக்கும் சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளியாகத் திகழ்ந்த டாக்டர் அம்பேத்கர் ஜனநாயகம், நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் கொண்ட இந்தியாவில் சமூக ஜனநாயகம் மற்றும் அரசியல் ஜனநாயகத்தின் உயர்ந்த மாண்பினை எடுத்துக்கூறி அரசியல் அதிகாரமே அனைத்திற்குமான திறவுகோல் என்றார். அவர் சுதந்திரத் தொழிலாளர் கட்சி, அனைத்திந்திய பட்டியலினக் கூட்டமைப்பு, குடியரசுக் கட்சி ஆகிய இயக்கங்களைத் தோற்றுவித்துக் கொள்கைகளை வரையறுத்துச் செயல்படுத்தி வந்தார். சிதறிக் கிடந்த மக்களை அரசியல் ரீதியில் அமைப்பாக்கிய டாக்டர் அம்பேத்கரின் மறைவிற்குப் பின் இந்தியாவில் அவரின் கொள்கைகளைத் தாங்கி ஒரு மாபெரும் அரசியல் எழுச்சியை ஏற்படுத்தியவர் மான்யவர் கன்ஷிராம்.

           

            மான்யவர் கன்ஷிராம், சாதியால் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளான  பகுஜன் (பெரும்பான்மை மக்கள்) சமூகத்தின் ஒற்றுமையைப் பலப்படுத்தி அவர்களுக்குள் அரசியல் தெளிவை ஏற்படுத்திச் சமூக மாற்றத்தை ஏற்படுத்திக் காட்டினார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும்  சிறுபான்மையினர்  சமூக ஊழியர்கள் கூட்டமைப்பு (BAMCEP), தலித் மற்றும் சுரண்டப்படுவோர் கிளர்ச்சிக் குழு (DS4) ஆகிய அமைப்புகளை 1971 இல் ஏற்படுத்தி மக்களை அமைப்பாக்கிய மான்யவர் கன்ஷிராம் 1984 இல் பகுஜன் சமாஜ் கட்சியைத் தோற்றுவித்தார். இந்தியாவின் வடக்குப் பகுதியான உத்திரப் பிரதேசத்தில் கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் 1995, 1997, 2002 ஆகிய ஆண்டுகளிலும் 2007 ஆம் ஆண்டுத் தனிப் பெரும்பான்மையுடனும் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியமைத்தது. மக்களால் பகுஜன்  நாயக் (தலைவன்) என்று மான்யவர் கன்ஷிராம் போற்றப்பட்டார்.

 

            கன்ஷிராமின் அயராத உழைப்பின் பலனாகப் பகுஜன் சமாஜ் கட்சி இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் வேரூன்றி தேசியக் கட்சியாக உருப்பெற்றது. இந்த நிலையில் 2006 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி மான்யவர் கன்ஷிராம் பரிநிர்வாணம் அடைந்தார். அந்த 2006 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் சென்னை பெரம்பூர் பகுதியில் டாக்டர் பீம்ராவ் தலித் அசோசியேஷன் எனும் சங்கத்தைக் கட்டமைத்து மக்கள் தொண்டாற்றி வருகிறார் சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்.

 

            2006 சென்னை மாநகராட்சித் தேர்தலில் வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டு மேலும் பல பணிகளைச் செய்ய திட்டம் கொண்ட ஆம்ஸ்ட்ராங் அவர்களிடம் அப்போது தமிழகத்தில் செயல்பட்டு வந்த பகுஜன் சமாஜ் கட்சியினர் யானைச் சின்னத்தில் போட்டியிடுமாறு கேட்டுக் கொண்டனர். அவ்வாறே போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் சென்னை 99 வது பகுதி உறுப்பினராக மாநகராட்சி மாமன்றத்தில் இருந்து தீரத்துடன் செயல்பட்டார்.  துடிப்புமிக்க அம்பேத்கரிய செயல்வீரரைக் கண்ட பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆம்ஸ்ட்ராங் அவர்களை, இந்தியாவின் இரும்பு மங்கை எனப் போற்றப்பெறும் சகோதரி மாயாவதி அவர்களிடம் அறிமுகப்படுத்தினர். பாபாசாகேப் அம்பேத்கரின் கொள்கைகளைத் தாங்கிய ஆற்றல் மிக்க இளம் தலைவரான ஆம்ஸ்ட்ராங் அவர்களை 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி அன்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகச் சகோதரி மாயாவதி நியமித்தார்.  பொறுப்பேற்ற அந்த நாளிலிருந்து அவரின் இறுதி மூச்சு இந்த மண்ணில் உலாவிய நொடி வரை பாபாசாகேப் அம்பேத்கரின் பிள்ளையாகப் பகுஜன் நாயக் மான்யவர் கன்ஷிராமின் மறு உருவமாகச் செயலாற்றினார்.



 

            அரசியல் அதிகாரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், ஒரு தலைமை, ஒரு கட்சி, ஒரு கொள்கையின் கீழ் ஒன்றுபடுங்கள்  என்று கட்டளையிட்ட பாபாசாகேப் அம்பேத்கரின் கருத்தை மேடைதோறும் சமகால அரசியல் செயல்பாடுகளுடன் பொருத்திக் காட்டி பேசி வந்தார். பெரும்பான்மை இந்தியர்களுக்கு வாக்குரிமை கிடைத்த வரலாறு, ஒரு மனிதன், ஒரு வாக்கு, ஒரு மதிப்பு என்ற தத்துவத்தின் விளக்கம், பதினான்கு மணி நேர வேலையிலிருந்து 8 மணி நேர வேலை, குடியரசு என்றால் என்ன?, அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கியமான அம்சங்கள்,  குடிமக்களுக்குக் கற்பிக்க வேண்டிய அரசியல் அறிவு போன்ற பல்வேறு விளக்கங்களை ஒரு பேராசிரியர் போல கற்பித்து வந்தார்.

 

            2006 ஆம் ஆண்டு, சென்னை 99 வது வார்டு மன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்ற காலத்தில் துப்புரவுப் பணியாளர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை மாநகராட்சி மேயரிடம் பேசி தீர்வு கண்டார். 2011 ஆம் ஆண்டு, கொளத்தூர் சட்ட மன்றத் தொகுதியில் அன்றைய துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை எதிர்த்துப் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்றார். தொடர்ந்து சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களில் தொடர்ந்து தம் கட்சி வேட்பாளர்களை நிறுத்தி தமிழ்நாட்டில் பகுஜன் சமாஜ் கட்சியின் வலிமையைக் கூட்டினார்.

 

            கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி, பெரும்பாக்கம் (காஞ்சிபுரம்), கே.வி.குப்பம் (வேலூர்), உள்ளியம்பாக்கம்  மற்றும் கீழ் குப்பம் (ராணிப்பேட்டை) ஆகிய இடங்களில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியையும் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திருநின்றவூர் நகராட்சியின்(திருவள்ளூர்) 8, 9 மற்றும் 16 வது வார்டு கவுன்சிலர் மற்றும் திருப்பனந்தாள் (தஞ்சாவூர்) பேரூராட்சியின் 5 வது வார்டு கவுன்சிலர் பதவியையும் மக்கள் ஆதரவுடன் தன்வயப்படுத்தி அப்பதவிகளை அலங்கரித்து  வருகிறது.  இந்த வெற்றி தமிழ்நாட்டின் பகுஜன் சமாஜ் கட்சியின் அரசியல் எழுச்சியின் ஒரு மைல்கல்லாகவும் சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் உழைப்பின் விளைச்சலாகவும் பார்க்கப்படுகிறது.

 

            வோட் ஹமாரா, ராஜ் துமாரா நஹீ சலேகா நஹீ சலேகா என்ற மான்யவர் கன்ஷிராமின் தாரக மந்திரத்தைத் தமிழ்ப்படுத்தி எங்கள் ஓட்டில் உங்கள் ஆட்சி நடக்காது இனி நடக்காது என்ற முழக்கத்தைத் தமிழகமெங்கும் பரப்பிய பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், துண்டறிக்கைகளிலும் பதாகைகளிலும் இந்தியாவை ஆள்வதே இறுதி இலட்சியம் என்ற முழக்கத்தை இடம் பெறச் செய்து ஆட்சி அதிகாரத்தின் மீதான எண்ணத்தைப் பகுஜன் மக்களிடத்தில் விதைத்து வந்தார். அவ்வாறே, தமிழ்நாட்டிற்குத் தேவை திராவிட மாடலா? குஜராத் மாடலா? என்ற வாதங்கள் நடைபெற்ற சூழலில் தம்ழிநாட்டிற்குத் தேவை ஜெய்பீம் மாடல் ஆட்சி என்பதைக் காரண காரியங்களோடு ஜெய்பீம் மாடல் விளக்கப் பொதுக் கூட்டத்தை தமிழ்நாட்டின் மாவட்டந்தோறும் நடத்தி வந்தார்.

 

           

அரசியல் பலம் பெற்று பகுஜன் ஆட்சியைச் சாத்தியப்படுத்த தன்னை முழுவதுமாக ஒப்படைத்துக்கொண்ட மான்யவர் கன்ஷிராம், மக்களிடத்தில் தன் சட்டைப்பையில் இருக்கும் பேனாவை எடுத்துக் காட்டி சாதிய சமூகக் கட்டமைப்பை விளக்குவார். பேனாவின் மேல் மூடிப் பிராமிணர்களையும் (15%) எழுதும் பகுதியான பேனா முள், பேனா மை உள்ளிட்ட பேனாவின் பிற பகுதி பகுஜன்களையும் (பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் =85%)  குறிக்கும் என்று கூறும் மான்யவர் கன்ஷிராம், பேனாவின் மூடியை அப்புறப்படுத்தினால்தான் நம் வரலாற்றை எழுத முடியும். எனவே பகுஜனாக ஒன்றுபடுங்கள் என்றார். அவர் வழியில் வந்த சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், தன் சட்டைப் பையில் உள்ள பேனாவை எடுத்து இந்தப் பேனா நம் சட்டைப் பைக்கு வந்த வரலாற்றை எடுத்துரைத்துப் பகுஜன்களை ஒருங்கிணைத்தார்.

 

            சாதி, மத, இன, மொழி, பாலின ஒடுக்குமுறைகளிலிருந்து விடுபடச் சமூக, அரசியல் தெளிவுள்ள கல்வியாளர்கள் அவசியம் என்பதை உணர்ந்த சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், தென்னிந்திய புத்தக விகார் என்ற பதிப்பகத்தையும் அன்னை சாவித்திரிபாய் இரவு பாடசாலையையும் நிறுவி அதனைத் திறம்படச் செயல்படுத்தினார். ஆண்டுதோறும் நடைபெறும் சென்னை புத்தகக் கண்காட்சியில் மக்களின் கவனத்தைப் பெரும் வகையில் பௌத்தம், அம்பேத்கரியம் சார்ந்த நூல்களை வெளியிட்டு மக்களிடத்தில் கொண்டு சேர்த்தார். இவரின் ஊக்கத்தால் உருப்பெற்ற வழக்கறிஞர்கள் பலர்,Elephant  Advocate Association’ என்ற சங்கத்தைக் கட்டமைத்து  தமிழகத்தின் பல பகுதிகளில் மக்கள் வழக்குரைஞர்களாகச்  செயல்பட்டு வருகின்றனர்.

 

            அறிவியல் அறிந்த நவீன மனிதனுக்கு மதம் இருக்க வேண்டும்.  அப்படி அவன் கொண்டிருக்க வேண்டிய ஒரே மதம் புத்த மதம” என்றார் பாபாசாகேப் அம்பேத்கர். தலித்துகள் ஒருபோதும் இந்துக்கள் இல்லை. சதுர்வர்ண அமைப்பிற்கு வெளியே உள்ள தலித்துகள் சாதியற்றவர்கள். அவர்களின் பூர்வீக மதம் பௌத்தம். பௌத்த மதத்தில் சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம் எனும் உன்னதமான கோட்பாடுகள் அடங்கியிருப்பதைத் தம் வாழ்நாளின் பாதிநாள் ஆராய்ந்து அறிந்த பாபாசாகேப் அம்பேத்கர், நான் ஓர் இந்துவாகப் பிறந்தேன். ஆனால் இந்துவாகச் சாக மாட்டேன் என்று உறுதி பூண்டு 1956 அக்டோபர் 14 ஆம் தேதி நாக்பூர் தீட்சாபூமியில் லட்சக்கணக்கான மக்களோடு  தாய்மதம் பௌத்தம் தழுவினார். இது இந்தியாவில் ஏற்பட்ட  மிகப்பெரிய சமயப் புரட்சி என்று வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர். பகுஜன் நாயக் மான்யவர் கன்ஷிராம், பாபாசாகேப் பௌத்தம் ஏற்ற 50 ஆவது ஆண்டான 2006 இல் அக்டோபர் 14 அன்று பௌத்தம் தழுவப் போவதை அறிவித்திருந்தார். ஆனால் அவர் அறிவித்த நாளுக்கு 5 நாடகள் முன்னரே பரிநிர்வாணம் அடைந்தார்.

 

            தென்னிந்தியாவின் மையமாகத் திகழும் தமிழ்நாட்டில், தொடக்கக் காலத்தில் உருவான பெரும்பாலான இலக்கியம், இலக்கணம், நிகண்டு என அனைத்தும் பௌத்த நூல்களே என அறிந்த போதிசத்வா பண்டிதர் அயோத்திதாசர்,  1858 இல் கர்னல் ஆல்காட்டின் முயற்சியால் இலங்கை சென்று தீட்சை பெற்றுப் பௌத்தத்தை ஏற்றார். சென்னை ராயப்பேட்டையில் சாக்கிய பௌத்த சங்கத்தை நிறுவி பௌத்தப் பணிகளில் எழுத்து, இயக்கம் என  ஈடுபட்டு வந்த பண்டிதர் 1914 ஆம் ஆண்டு பரிநிர்வாணம் அடைந்தார். அவரின் மறைவிற்குப் பின் பௌத்தப் பணிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்றுவந்த சூழலில் பண்டிதர் அயோத்திதாசரின் நினைவாகச் சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் தன் குடியிருப்பிற்கு (பெரம்பூர்)  அருகே,  தென்னிந்திய புத்த விஹாரை, சகோதரி மாயாவதி பிறந்தநாளான ஜனவரி 15 அன்று 2018 இல் புதிதாகக் கட்டி திறந்து வைத்தார். திறப்பு விழாவிற்கு இந்தியாவின் புகழ்பெற்ற பௌத்தத் தலங்களான புத்தகயா, வாரணாசி ஆகிய இடங்களிலிருந்தும் மகாராஷ்டிரம், கர்நாடக உள்ளிட்ட இந்தியாவின் பிற பகுதி மற்றும் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் புத்த பிக்குகள், பிக்குணிகள் அழைத்து வரப்பட்டனர் என்பது தமிழ் பௌத்த வரலாற்றின் முக்கியமான பாகம் ஆகும்.  மூன்று மாடி அடுக்குக் கொண்ட புத்த விகாரின் மாடியில்  சமூகத் தலைவர்களின் படங்கள், கருத்துகளோடு நூலகம் ஒன்றும் அமைத்துள்ளார்.

 

            தென்னிந்திய புத்த விகாரில் மாதந்தோறும் முழுநிலவு நாளில் கூடுதல், பௌத்தப் பண்டிகைகளைக் கொண்டாடுதல், திருமணம் உள்ளிட்ட மங்கல நிகழ்ச்சிகளை நடத்துதல், தாய்மதம் திரும்பும் புரட்சி எனும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பண்டிதர் அயோத்திதாசர் நிறுவிய பௌத்த சங்கத்தை நினைவுகூறும் விதத்தில் 2021 ஆம் ஆண்டு தென்னிந்திய புத்த விகாரின் 125 ஆம் ஆண்டு விழா எனும் பெயரில் உலக பௌத்தத் தலைவர்களை அழைத்துப் புத்தகம் வெளியிடுதல், கலை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தல் ஆகிய பணிகளைப் பண்பாட்டுத் தளத்தில் ஆம்ஸ்ட்ராங் மேற்கொண்டார்.

 

            சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், தன்னுடைய நடை, உடை, பாவனை, பேச்சு உள்ளிட்ட புறத் தோற்ற அழகுகளில் பாபாசாகேப் அம்பேத்கரையும் புத்தர், பாபாசாகேப் அம்பேத்கர்  கொள்கைகளைக் கற்று தான் கொண்ட சிந்தனைத் தெளிவு உள்ளிட்ட அக அழகுகளில் பகுஜன் நாயக் கன்ஷிராமையும் பிரதிபலித்தார். சகோதரத்துவம் இல்லாத சமத்துவம், சுதந்திரம் பயனற்றது. சகோதரத்துவம் இருந்தால் தான் சமத்துவம்  மலரும் என்றார் பாபாசாகேப் அம்பேத்கர்.  தன் வாழ்நாளில் சகோதரத்துவம் நிரம்பிய மனிதராக இருந்ததன் விளைவால்தான் மக்களால் சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் என்று போற்றப்பட்டார்.

 

            “மனிதன் நிலையானவன் அல்ல. ஒவ்வொருவரும் ஒரு நாள் இறக்க நேரிடும். ஆனால் சுயமரியாதையின் உன்னத லட்சியங்களைச் செழுமைப்படுத்துவதற்கும், மனித வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் ஒருவர் தனது வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும். நாங்கள் அடிமைகள் அல்ல. போர்வீரர் குலத்தைச் சார்ந்தவர்கள்” என்ற பாபாசாகேப் அம்பேத்கரின் கூற்றுக்கு இணங்க வாழ்ந்து, பாபாசாகேப் இழுத்து வந்தத் தேரை முன் நகர்த்திய பெருமைக்குரியவர் சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்.  

 

            பகுஜன் நாயக் மான்யவர் கன்ஷிராமின் அரசியல் எழுச்சி பெற்ற மக்கள், பாபாசாகேப் அம்பேத்கரிடம், பாபாசாகேப்! நீங்கள் விட்டுச் சென்ற பணிகள் முழுவதையும் கன்ஷிராம் செய்வார்” (பாபா தேரா மிஷின் ஆதூரா கான்ஷி ராம் கரேகா பூரா) என்றனர். அவ்வாறே மான்யவர் கன்ஷிராமிடம், “கன்ஷிராம்! உங்களுடைய உன்னதமான பணி எதுவெனில் தூங்கிக் கொண்டிருந்த எங்களை எழுப்பி விட்டாய்”. (கான்ஷி தேரி நேக் கமாயி துனே ஸோதி கோம் ஜகாய்) என்றனர். உத்திரப் பிரதேசத்தில் ஒலித்த இக்குரல் தமிழ்நாட்டிலும் ஒலித்தன. கன்ஷிராம் என்ற பெயர் இருந்த இடத்தில் மிகப் பொருத்தமாக இட்டு நிரப்பக் கூடிய பெயராக ஆம்ஸ்ட்ராங் என்ற பெயர் இருந்தது என்பதை வரலாறு இனி எழுதும்.

  ஜெய் பீம்.                              ஜெய் ஆம்ஸ்ட்ராங்


(நீலம் பதிப்பகம் வெளியிட்ட 'சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்க்' நூலில் வெளிவந்தக் கட்டுரை)

 

 



Friday, 26 January 2024

அனைவருக்கும் அனைவருக்கும் கல்வித்திட்டம் - கவிஞர் த. சிவலிங்கம்

 

அனைவருக்கும் அனைவருக்கும் கல்வித்திட்டம்

அனைவருக்கும்  கல்வி  ஏற்றும் திட்டம்

கட்டாயமாம் கட்டாயமாம் பள்ளிக்கல்வி

கட்டாயமாம்  எட்டாவது பள்ளிக்கல்வி

காலம் காலம் கல்விக்காலம் 

இனி எவரும் படிக்கும் நல்லகாலம்.

 

பள்ளிக்கூடம்  பள்ளிக்கூடம் போகனுங்க

பள்ளிக்கூடம்  நல்ல வழி சொல்லுதுங்க

வீட்டுக்குள்ள வீட்டுக்குள்ள இருக்காதீங்க

மாற்றுத்திறன் கொண்டவரே பள்ளிக்கு வாங்க

அனைவருக்கும் கல்வி பாடல் - கவிஞர் த. சிவலிங்கம்

 

கவிஞர் த. சிவலிங்கம்

அக்கம் பக்கம் ஆடிவரும்

அத்த வீட்டு பிள்ளையாட்டம்

பள்ளிக்கூடம் போகவேண்டும்  எம்மா ....

என் ஊனம் ஒரு பாரமில்ல எம்மா ....

 

கை காலு ஊனமுன்னு அம்மா நீங்க சொல்லாதீங்க

மாற்றுத்திறன் எனக்கு உண்டு அம்மா

நான் வீட்டில் ஒளி  ஏற்றிடுவேன் எம்மா

 

பள்ளிக்கூட வாசலிலே எங்களுக்கும் வாசல் உண்டு

பள்ளிக்கூடம்  போகப்போறன்  எம்மா ....

நான்  படிச்சி பட்டம் வாங்கிடுவேன் எம்மா ....

 

எவரெஸ்டு சிகரம் ஏறி வென்ற கத தெரியும்மம்மா

காலில்லா காலத்திலும்    எம்மா

அவர் சாதனதான் செய்தவரு  எம்மா .....

 

வாயால  எழுதிடுவேன் காலாலும் எழுதிடுவேன்

எங்களுக்கு காலம் உண்டு எம்மா ....

என்ன வீட்டில் சும்மா வைக்காதீங்க எம்மா ....

என் ஆய்வு மேம்பாட்டிற்குப் பேராசிரியர் எச். பாலசுப்பிரமணியம் அவர்களின் பங்களிப்பு


புதுதில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக இந்திய மொழிகள் மையத்தில் தமிழ்ப் பிரிவில் 2010 – 2016 ஆம் கல்வியாண்டுகளில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் முனைவர் பட்டமும் மேற்கொண்ட காலத்தில் எனக்கு மூன்றாவது நெறியாளராக இருந்து எம்மை வழி நடத்தியவர் பேராசிரியர் எச். பாலசுப்பிரமணியம் அவர்கள்.


            ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் தமிழ்ப் பிரிவில் தமிழ் மற்றும் பிற இந்திய அல்லது உலக மொழிகளுடனான ஒப்பீட்டு ஆய்வுகள் பெரும்பாலும்  மேற்கொள்ளப்பெற்று வருகின்றன. ஒவ்வொரு ஆய்வு மாணவரும் தமிழ் அல்லாத ஏதேனும் ஒரு பிற இந்திய அல்லது உலக மொழிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நிலையில், நான் இந்திய மொழிகளில் பெரும்பான்மை மக்களால் பேசப்படுகின்ற இந்தி மொழியைத் தேர்ந்தெடுத்தேன்.


            தமிழ் இந்தி தலித் தன்வரலாற்று நூல்கள் ஓர் ஒப்பாய்வு: வடு – ஜூட்டன் ஒரு சிறப்புப் பார்வை என்னும் தலைப்பில் ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வை மேற்கொண்டேன்.  பேராசிரியர் கே. ஏ. குணசேகரன்  எழுதிய வடு என்ற தன்வரலாற்று நூலையும் (தமிழ்) ஓம் பிரகாஷ் வால்மீகி எழுதிய ஜூட்டன் என்ற தன்வரலாற்று நூலையும் (இந்தி) ஒப்பிட்டு அந்த ஆய்வு அமைந்தது.  ஆய்வேட்டின் ஒரு இயலாக மொழிபெயர்ப்புச் சிக்கல்கள் என்னும் பகுதி அமைய வேண்டும் என்றும்  பின்னிணைப்பில் சொல்லடைவு கொடுக்கப்பட வேண்டும் என்றும் பேராசிரியர் கி. நாச்சிமுத்து மற்றும் என் நெறியாளர் முனைவர் நா. சந்திரசேகரன் ஆகியோர்  கூறியிருந்தனர்.  சொல்லடைவில் இந்தி சொல், தமிழ் ஒலிபெயர்ப்பு, இலக்கணக் குறிப்பு,  தமிழ் மொழிபெயர்ப்பு ஆகியவை இடம் பெற வேண்டும். அப்போது மத்திய இந்தி இயக்ககம் நடத்தும் சான்றிதழ் படிப்பில் (Certificate course Hindi) சேர்ந்திருந்தேன். 

    தொடக்க நிலைப் படிப்பு என்பதால் இந்தி மொழி இலக்கண அமைப்பை என்னால் முழுமையாக விளங்கிக் கொள்ள முடியவில்லை. அந்த நிலையில் பேராசிரியர் எச். பாலசுப்பிரமணியம் அவர்களைத் தொடர்பு கொண்டு இந்தி மொழிபெயர்ப்புக்காக உங்களின் உதவி தேவை ஐயா. வீட்டிற்கு வருகிறேன் என்றேன். உடனே அவர், நாளை நான் பல்கலைக்கழகம் வருகிறேன். அங்கேயே சந்திப்போம். அலைய வேண்டாம் என்றார்.  மறுநாள் எனக்கு தேவையான பகுதிக்குரிய இலக்கணக் குறிப்பை மட்டும் சொல்லாமல் இந்தி மொழியின் அடிப்படை இலக்கணத்தைக் (பெயர்ச்சொல், வினைச்சொல், வேற்றுமை உருபுகள்) கற்றுக் கொடுத்தார். அது எனக்கு பின்னாட்களில் நான் படித்த பட்டயப் படிப்பு (Diploma) மற்றும் மேம்பட்ட பட்டயப் படிப்பிற்குப் (Advance Diploma in Hindi) பேருதவியாய் அமைந்தது.

 

            என்னுடைய முனைவர் பட்ட ஆய்வு ஜீலை 2012 இல் தொடங்கியது. ஆய்வுத்தலைப்பு தமிழ் – இந்தி இலக்கியங்களில் கர்ணன் கதை – ஓர் ஆய்வு ஆகும். இதில் தமிழில் வெளிவந்த கர்ணன் குறித்த ஐந்து இலக்கியங்களையும் இந்தியில் வெளிவந்த கர்ணன் குறித்த ஐந்து இலக்கியங்களையும் ஒப்பிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பெற்றது. இந்தியில் ராம்தாரி சிங் தினகரின் ரஷ்மீரதி (கவிதை), சேட் கோவிந்ததாஸின் கர்ணன் (நாடகம்), ஜெகதீஷ் சதுர்வேதியின் சூர்யபுத்ர (கவிதை) பாஷனின் கர்ணபாரம் ( இந்தி வடிவ நாடகம்) மற்றும் ஹெச். கன்ஹைலாலின் கர்ணன் (இந்தி வடிவ நாடகம்) ஆகிய ஐந்து நூல்களை ஆய்வுக்கு முதன்மை ஆதார நூல்களாக எடுத்துக் கொண்டேன். இதில் சேட் கோவிந்த தாசின் கர்ணன் நாடகமும் ஜெகதீஷ் சதுர்வேதியின் சூர்யபுத்ர கவிதையும் பழைய இந்தி மொழி நடையில் எழுதப்பட்டவை. அதனைப் படித்து பொருள் புரிந்து கொள்ள மிகக் கடினமாக இருந்தது.

     என்னுடைய இணை நெறியாளர் பேராசிரியர் ராம் சந்திரா என்னுடைய ஆய்வேடு  தொடர்புடைய இந்தி இலக்கியப் பகுதிகளை விளக்கிய போதிலும் முதன்மை ஆதார நூல்களை நன்கு  அறிந்து கொள்ள பேரா. எச். பாலசுப்பிரமணியம் அவர்களே பெரிதும் பங்காற்றினார். அந்த சூழலில் அவர் வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. யாரையும் எதற்காகவும் தேவையின்றி அலையவைப்பதை ஒருபோதும் விரும்பாத அவர் முடிந்தவரை எங்கு சந்திக்கிற வாய்ப்பு உள்ளதோ அங்கேயே இருக்கும் இடத்தில் அமர்ந்து கிடைக்கும் நேரத்திக்குள் எவ்வளவு கற்றுத்தர முடியுமோ அவ்வளவு கற்றுத் தருவார். வாய்ப்பு இல்லாதபோது வீட்டிற்கு வரச்சொல்லுவார். அப்படி செல்லும் போது மதிய உணவை அவரே சமைத்துப் பரிமாறுவார். உணவு கொடுத்து கல்வியை ஊட்டும் அவரின் தாய்மைப் பண்பு எத்தகையது என்பதை எழுத்தில் எளிதாக சொல்லி விட முடியாது.    

 

            2015 மார்ச் மாதம் தமிழ்ப்புலத்தில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் குறித்த தேசியக் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் திருக்குறள் இந்தி மொழிபெயர்ப்புகள் ஓர் ஆய்வு (ரவீந்திரகுமார் சேட் , எச். பாலசுப்பிரமணியம் மொழிபெயர்ப்பை முன்வைத்து) என்னும் தலைப்பில் கட்டுரை எழுதினேன். அப்போது எனக்கு  ஏற்பட்ட ஐயங்களைத் தொலைபேசியில் உடனுக்குடன் தீர்த்து வைத்தார். அக்கட்டுரையில் இந்தியில் வெளிவந்த திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்களுள் ரவீந்திரகுமார் சேட் மற்றும் எச். பாலசுப்பிரமணியம் ஆகியோரின் மொழிபெயர்ப்பு நூல் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நூலாகத் திகழ்கிறது என்பதை விளக்கியுள்ளேன். இக்கருத்தரங்கம் முடிந்த அடுத்த மாதம் (ஏப்ரல் 2015) பாரதியும் சமகால ஆளுமைகளும் என்னும் தலைப்பில் அடுத்த தேசியக் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் பாரதி, ராம்தாரிசிங் தினகர் படைப்புகளில் பாரதம் என்னும் தலைப்பில் கட்டுரை எழுதினேன். கருத்தரங்கில் கட்டுரையை வாசித்தப்பின் நான் இருக்கையில் அமர்ந்தபோது, பேராசிரியர் எச். பாலசுப்பிரமணியம் என்னருகே வந்து ‘Proud of you’ என்று வாழ்த்தினார். அப்போது அச்சொல் இதைவிடப் பெரிய அங்கீகாரம் வேறேதும் இல்லை என்ற உணர்வையும்  இந்த நிலையை இனிவரும் நாட்களிலும் தொடர வேண்டும் என்ற எண்ணத்தையும் எனக்குள் ஏற்படுத்தியது.

           

            2016 ஜீலையில் ஆய்வேட்டை ஒப்படைத்தப்பின் சென்னையில் கல்லூரியில் பணிபுரிந்துகொண்டிருக்கும் போது என்னுடைய நெறியாளர் முனைவர் நா. சந்திரசேகரன் அவர்கள் தொலைபேசியில் அழைத்து என்னுடைய வாய்மொழித் தேர்வு நாளை அறிவித்தார். அதற்காக ஆயத்தமான நான், பேராசிரியர்  எச். பாலசுப்பிரமணியம் ஐயாவிடம் தகவல் தெரிவிக்காமல் டெல்லி சென்று வாய்மொழித் தேர்வுக்கு முந்தைய நாள் தொடர்பு கொண்டேன். தொலைபேசியை எடுத்த உடன், நாளை வந்துவிடுவேன். வாழ்த்துகள் என்றார். வெளியே சென்றவர்கள், தற்போது உள்ள மாணவர்கள் என்று எதையும்  பாராமல் துறையில் எந்த மாணவருக்கு என்ன நடக்கிறது என்பதைக் கண்காணித்து அவர்களின் பயணத்தில் இந்த வயதிலும் தன்னையும் இணைத்துக் கொள்கிறாரே! எப்படி அவரால் முடிகிறது என்று உண்மையில் வியந்து போனேன். அவ்வாறே சொன்னபடி என்னுடைய முனைவர் பட்ட வாய்மொழித்  தேர்வு நாளன்று எப்போதும் போல் முன்னரே வந்து வாய்மொழித் தேர்வு முடிந்து புறத்தேர்வாளரை வழி அனுப்பும் வரை உடனிருந்தார். அதுதான் அவருடனான கடைசி சந்திப்பு என்று எனக்கு அப்போது தெரியாது.

            கல்வி, தகுதி, வயது, குடும்பச் சூழல்   மற்றும் இன்னபிற எந்த காரணங்களையும் பொருட்படுத்தாமல் தன்னை நாடி அனைவருக்கும் உழைத்தவர் பேராசிரியர் எச். பாலசுப்பிரமணியம் ஐயா.  இனம், மொழி,  சாதி, சமயம், பால் என்ற எந்த எல்லைக்குள்ளும் இல்லாது எண்ணம், சொல், செயல்களில்  நேர்மையும் எளிமையும் கொண்டு என்னைப் போல் எண்ணற்றோர் ஏற்றத்தில் துணையாய் நின்ற பேராசிரியரின் புகழ் காலம் உள்ளளவும் நிலைக்கும். அதற்கு அவரின் வாழ்வே சாட்சி.

 

                                                                                                முனைவர் அ. ஜெயபால்