Tuesday, 15 October 2024

 

தீபக் பாண்டியன் என்னும் தீப்பிழம்பு

-       ஜெயபால் சோலை

 


உழவுத் தொழிலால்

ஊருக்கே சோறுபோடும்

உழைப்பின் அடையாளமாம்

தேவேந்திர குலத்தின் தீரனே!

 

மக்களின் குரலுக்கு

மனம் கொடுத்து

மண்ணையும் மானத்தையும் காக்க வந்த

மாவீரன் இம்மானுவேல் சேகரனாரின்

மறு உருவமே!

மள்ளரின மாணிக்கமே!

 

ஒடுக்குமுறைகளுக்கு எதிராய்

உரிமைக்குரல் கொடுத்த

பசுபதி பாண்டியனாரின் இதயத் துடிப்பே!

 

ஏரும் போரும் எம் குலத்தொழில்

எம் இனத்தில் சிறு புல்லும் கூட

போருக்குப் புறப்படும் எனும் வைர வரிகளுக்கு

விளக்காய்த் திகழ்ந்த – எங்கள்

விடிவெள்ளியே!

 

உம் பேச்சில் எத்தனை துடிப்பு

உம் நடையில் எத்தனை தோரணை

உம் சிரிப்பில் எத்தனை ஈர்ப்பு

உம் தோற்றத்தில் எத்தனை ஆர்ப்பரிப்பு

உம் சிந்தனையில் எத்தனை விடுதலைத் தாகம்

அடடா!...

 

உம்மைக் கண்டு அஞ்சிய கயவர்கள்

நேருக்கு நேர் மோத முடியாத கோழைகள்

நினைத்திருக்கலாம்

உம்மை வீழ்த்திவிட்டோம் என்று.

ஆனால் நீயோ,

தீபக் பாண்டியன் என்னும் தீப்பிழம்பாய்

இலட்சக்கணக்கான இளைஞர்களின்

இதயத்தில் குடிகொண்டு விட்டாய்.

 

விடுதலைத் தாகம் கொண்ட சமூகத்தை

வழிநடத்தும் - அனைத்து

வல்லமையும் கொண்ட

தலைவனே!

 

நீ!

டாக்டர் அம்பேத்கர் வழியில்

ஒடுக்கப்பட்டோரின்  விடுதலைக்கு

அரசியல் அதிகாரம் அவசியம் என்றாய்

மக்களோடு மக்களாய் களத்தில் நின்றாய்

புரட்சிகரக் கருத்துக்களை

எளியோருக்கும் புரிய விதைத்தாய்

தன்னைப் பின்பற்றும் யாவருக்கும்

மது, போதை கூடாது எனக் கட்டளையிட்டாய்

ஆனால்,

பொய்யைப் பரப்பிச் சுகம் காணும் கூட்டத்திற்கும்

சாதி நஞ்சை உண்ணும் ஊடகங்களுக்கும்

நீ  ரௌடியாய்த் தெரிகிறாய்.  

ஆம், அநீதியை எதிர்த்து ஒருவன்

நெஞ்சை நிமிர்த்தினால் – அவனை

எதிர்கொள்ள முடியா ஆதிக்கச் சமூகம்

அப்படித்தான் அடையாளப்படுத்தும்..

 

அடக்குமுறைகள் கண்டு அஞ்சாத மாவீரனே!

சூரியனை யாரும் கைகளைக் கொண்டு

மறைத்துவிட முடியாது என்பதற்கு

உம் இறுதி ஊர்வலமே சாட்சி.

பல்லாயிரக்கணக்கானோர் உம் உடலைச் சூழ

லட்சக்கணக்கானோர் இணைய நேரலைகளில்  சேர

எம் சகோதரிகள்

களப்போராளி தீபக் பாண்டியனுக்கு வீரவணக்கம்

என்று இடியாய் முழங்க....

நீ!

எங்கள் இல்லங்களில் தீபமானாய்

எங்கள் குலத்தின் ராஜாவானாய்

 

பாண்டியனாய் வாழ்ந்த ராஜாவே!

பத்தாம் வகுப்போடு

பள்ளிப் படிப்பை நிறுத்தும்

நம் பிள்ளைகளைப் பார்த்து

கஷ்டமா இருக்கு! என்று

நீ வேதனைப்பட்டதை

இப்போது நினைத்தாலும்

கனத்துப் போகிறது  எங்கள் இதயம்.

 

வாகைகுளம் தந்த வள்ளலே!

வாஞ்சையோடு நேசிக்கும் வாலிபத் தகப்பனே!

உம் வருகையும்

நீ ஊட்டிய விடுதலை உணர்வும்

வரலாற்றின் பக்கங்களில்

நிலைத்தத் தடங்களாய்

நீடு வாழும்.

 

சமத்துவம்

சகோதரத்துவம்

சுதந்திரம் மலரும் வரை

இந்த மண்ணில்

உம் குரல் ஒலிக்கும்.  

உம் புகழ் நிலைக்கும்.

  

வாழ்க நீ எம்மான்!

No comments:

Post a Comment